ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு முக்கிய பாடசாலையில் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களும் ஒரு பழைய மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (28) ஹட்டன் தலைமையக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புடையவராக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த சம்பவம் பாடசாலை மட்டத்தில் சமரசமாக தீர்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் தாக்குதல் இடம்பெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் நேற்று பிற்பகல் ஹட்டன் காவல்நிலையத்தில் முறையிட்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மாணவர்களும் ஒரு பழைய மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட மூவரும் நாளை (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.