2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண திருத்தம் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.
இரண்டாம் காலாண்டிற்கான கட்டணத்தை 13.56 சதவீதம் உயர்த்த வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அலகு அடிப்படையிலான கட்டமைப்பில் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி 0 முதல் 30 அலகுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு 4.3 சதவீத உயர்வு விதிக்கப்பட்டுள்ளதுடன் மாதந்தோறும் சுமார் 15 ரூபாய் அதிகரிப்பு ஏற்படும். 31 முதல் 60 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 6.9 சதவீத உயர்வுடன் மாதத்திற்கு 45 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.
மேலும் 61 முதல் 90 அலகுகள் வரை 6.9 சதவீத உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாதாந்த கட்டணத்தில் 120 ரூபாய் வரை அதிகரிப்பு காணப்படும். 91 முதல் 120 அலகுகள் வரை பயன்படுத்துவோருக்கு 7.1 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாதச் செலவில் 420 ரூபாய் வரை உயர்வு ஏற்படும்.
180 அலகுகளை மீறும் மின்சார நுகர்வுக்கு அதிகபட்சமாக 25 சதவீத கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்கு குறைவாக உள்ள மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு விதிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 180 அலகுகளை மீறும் நுகர்வைக் கொண்ட அதே பிரிவினருக்கு 9.6 சதவீத கட்டண உயர்வை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.