சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தாமதமின்றி வழங்கும் நோக்கில் கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்து வைக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களும் வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கிழக்கில் நிலவும் போர்நிலை காரணமாக உர விநியோகத்தில் தடைகள் ஏற்படும் வாய்ப்பு மற்றும் சிலர் உரங்களை சேமித்து வைக்கும் நிலைமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நெற்செய்கைக்கு தேவையான உரங்களை அரசின் கமநல சேவை நிலையங்கள் மூலமாக மட்டுமே விநியோகிக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறு போக பருவச் செய்கை தொடங்கியுள்ள பகுதிகளில் தற்போது உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை ஒன்றின் விலை ரூ. 9,900 முதல் ரூ. 10,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.