மிரிகாமாவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில், யூத மதக் கோஷர் முறையில் இறைச்சி தயாரித்த ஐந்து வெளிநாட்டு யூத மதகுருமர்கள், பயண விசா விதிமீறலுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் (DIE) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வு தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையில், மூன்று இஸ்ரேலியர்கள், ஒரு ஆஸ்திரேலியர் மற்றும் ஒரு இத்தாலியர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சமீபத்தில் பயண விசாவில் இலங்கைக்கு வந்து, தொழிற்சாலையில் கோஷர் முறையில் கோழி இறைச்சி தயாரித்துள்ளனர்.
இந்த இறைச்சி, யூத சமூகம் வசிக்கும் சபாட் ஹவுஸ் மையங்கள் மற்றும் அருகம்பே பகுதி போன்ற பகுதிகளில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“யூத மதச்சடங்குகள் மூலம் உணவு தயாரித்தல் இலங்கையில் சட்டவிரோதமல்ல. எனினும், பயண விசாவில் வணிக நடவடிக்கைகள் மேற்கொள்வது அனுமதிக்கப்படாதது. இது போன்ற செயல் பயண விசா விதிமீறலாகும்.”
இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன், மத அனுமதி மற்றும் தகுந்த வகையான விசா பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து மதகுருமர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜா அவர்களின் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.