ஈரான்–அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு முன்வைத்திருந்த காலக்கெடு இன்று (செவ்வாய்) இரவு முடிவடைகிறது.
வாஷிங்டன் டி.சி. நேரப்படி இரவு 8 மணியுடன் இந்த அவகாசம் நிறைவடையும் நிலையில் டிரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் “இன்றிரவு ஒட்டுமொத்த நாகரிகமே அழியப்போகிறது. அது மீண்டும் எழாது போகும் அபாயம் உள்ளது. இது நான் விரும்புவது அல்ல, ஆனால் நிகழ வாய்ப்பு அதிகம்” என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் “முழுமையான ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. புத்திசாலித்தனமான மற்றும் குறைந்த வன்முறையுடைய சிந்தனைகள் முன்னிலை பெறலாம். ஒருவேளை எதிர்பாராத மாற்றமோ புரட்சியோ நிகழலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலக வரலாற்றின் முக்கிய தருணங்களில் ஒன்றாக இன்றைய இரவை விவரித்துள்ள டிரம்ப் “47 ஆண்டுகளாக நீடித்த அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறை முடிவுக்கு வரக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரான் மக்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும் எனவும் அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.