2026 ஆம் ஆண்டிற்கான விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் திருத்தப்பட்ட மின் உற்பத்திச் செலவு மதிப்பீட்டை ‘நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்’ நிறுவனம் அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
எரிபொருள் விலையேற்றத்தால் மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமை கட்டண உயர்வுக்கான பிரதான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பொதுமக்களின் வாய்மூல கருத்து கேட்பு நிகழ்வுகளும் அண்மையில் நிறைவடைந்தன.
அதேவேளை தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்கட்டண திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி மின்கட்டணம் 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.