(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அண்மையில் பிரதமரை சந்தித்து அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். அச்சந்திப்பின் போது பாடநெறியை மீள ஆரம்பிப்பதற்கான தேவையை வலியுறுத்தியதையடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் பரிந்துரை செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நாலக கலுவெவவை இன்று(18) கல்வி அமைச்சில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.