(மருதமுனை செய்தியாளர்)
கிழக்கு மாகாணக் கல்வித்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட சிரேஷ்ட அதிகாரியான எம்.வை. யாஸீர் அரபாத் (SLEAS-I) அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகப் நியமனம் பெற்றுள்ளார்.
சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக (நிருவாகம்) திறம்படக் கடமையாற்றிவந்த இவர் எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த புதிய உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்தை (SLEAS Class-I) சேர்ந்த யாஸீர் அரபாத் சம்மாந்துறை வலயத்தின் கல்விசார் அபிவிருத்திகளில் மிக முக்கிய பங்காற்றியவர். கல்வி மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் பலவருட கால அனுபவமிக்க இவர் ஒரு சிறந்த ஆளுமையாகவும் கல்வி அதிகாரியாகவும் மதிக்கப்படுபவர் ஆவார்.
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவராவார். பாடசாலைக் காலம் தொட்டே சிறந்த கல்வித் திறமைகளை வெளிப்படுத்தி வந்த இவர் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்றுள்ளமை அவரது தாய் நிறுவனத்திற்கும் மருதமுனை பிரதேசத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
இவரது புதிய பதவிக் காலத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வித் தரம், பௌதீக வள அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் பரீட்சை விடைபெறுகை விகிதம் என்பன மேலும் வீறுகொண்டு முன்னேறும் என அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகம் பெரும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
எமது செய்தித்தளமும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .