அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு புதிய வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையின் கீழ் தலா 10 கிலோ வீதம் இரு பொதிகளாக 20 கிலோ சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி என்பன அரச ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கென விசேட வவுச்சர் முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் அரச ஊழியர்கள் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் (கோ-ஆப்) மூலம் தமக்குரிய அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி விநியோகிப்பதற்கான முறையான திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.