இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு மிக முக்கியக் காரணியாக விளங்குவது உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) ஆகும். ‘சைலண்ட் கில்லர்’ என்று அழைக்கப்படும் இந்த கொலஸ்ட்ரால் பாதிப்பு, ஆரம்பத்தில் எந்தவொரு பெரிய அறிகுறியையும் காட்டாமல் உள்ளுக்குள்ளேயே ரத்த நாளங்களை அடைத்து, உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.
சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின்படி, இந்தியர்களில் சுமார் 81.2% பேர் ஏதேனும் ஒரு வகையான கொழுப்புச் சீர்குலைவால் (Dyslipidemia) பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31% பேருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவுகள், உடற்பயிற்சியற்ற நகர்ப்புற வாழ்க்கை முறை காரணமாக 19 முதல் 40 வயதுடைய இளைஞர்களிடமும் இந்த பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் ஆபத்தான கட்டத்தை எட்டும்போது உடல் வெளிப்படுத்தும் 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் இதோ:
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது மூளை மற்றும் உள் காதுப் பகுதிக்குச் செல்லும் தமனிகளின் (Arteries) சுவர்களில் படிந்து ரத்த ஓட்டத்தைச் சுருக்குகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு தற்காலிகமாகக் குறைந்து, உடலின் சமநிலையைக் கட்டுப்படுத்தும் உள் காதுப் பகுதி பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாகவே அடிக்கடி தலைசுற்றல் அல்லது திடீர் மயக்கம் ஏற்படுகிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் மிக அதிகமாகும் போது, கைகளுக்கும் கால்களுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு (Peripheral Artery Disease – PAD) ஏற்படுகிறது. இதனால் நரம்புகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தடைபடுகின்றன. போதிய ரத்த ஓட்டம் இல்லாததால், கைகளில் பலவீனம், சோர்வு மற்றும் அடிக்கடி மரத்துப்போதல் அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு (Tingling Sensation) ஏற்படும்.
இது நேரடியாக கொலஸ்ட்ரால் அறிகுறி இல்லை என்றாலும், இதய நோய் அல்லது மாரடைப்பின் மிக முக்கியமான முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறியாகும். இதயத் தமனிகளில் கொழுப்பு அடைப்பதால் ஏற்படும் நெஞ்சு வலியானது (Angina), கழுத்து, தாடை மற்றும் இடது கை முழுவதும் பரவும். இந்த அறிகுறி தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது உயிரைக் காக்கும்.
பொதுவாக நெஞ்செரிச்சலை நாம் அசிடிட்டி என்று அலட்சியப்படுத்துகிறோம். ஆனால், உடலில் ட்ரைகிளசரைட் (Triglycerides) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது கல்லீரல் மற்றும் பித்தப்பையின் செயல்பாட்டைப் பாதித்து கடுமையான செரிமானக் கோளாறுகளையும், மார்பின் மையப்பகுதியில் ஒருவித அசௌகரியத்தையும் அல்லது நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும்.
குளிர்ந்த அறையிலோ அல்லது கடினமான வேலை செய்யாத போதோ திடீரென உடல் முழுவதும் அதிகமாக வியர்ப்பது கொலஸ்ட்ரால் அடைப்பின் அறிகுறியாகும். இதயத் தமனிகளில் கொழுப்பு அடைப்பதால், உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தைச் செலுத்த இதயம் வழக்கத்தை விட மிகக் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். இந்த அதீத அழுத்தத்தின் காரணமாக, உடலின் வெப்பநிலையைக் குறைக்க நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு வியர்வை அதிகமாக வெளியேறும்.
30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது ‘லிப்பிட் ப்ரொஃபைல்’ (Lipid Profile) ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முறையான உணவுப் பழக்கம், தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்து மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்கலாம்.