Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

2028ஆம் ஆண்டில் கடனில்லா இலங்கை நோக்கி பயணிக்கின்றோம் ஜனாதிபதி உரை

Posted on June 16, 2025 by Arfeen | 207 Views

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அதற்காக, மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, இன்று (16) கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற “இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்” (Sri Lanka’s Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில் பிரதான உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டில் மேலோட்டமான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகியுள்ள போதிலும், அந்த நிலைமையை பலமாக நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய பொருளாதார மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நாடு பல பொருளாதார வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் இலங்கையின் அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி (ECF) வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர்