(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
கடந்த 30 வருடங்களாக எவ்வித பதவியுயர்வுகளுமின்றி சேவையாற்றி வரும் சுமார் 18,000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அச்சேவையில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (07) பாராளுமன்றத்தில் விசேட கேள்வியெழுப்பவுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவிடம் இந்த வாய்மூல விடைக்கான வினாக்களைத் தொடுக்கவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நீண்டகாலமாகச் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த 18 ஆயிரம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இதுவரை எவ்வித பதவியுயர்வுகளும் வழங்கப்படாமை தொடர்பிலும் , குறித்த அமைச்சு மட்டத்தில் இவர்களுக்கான பதவியுயர்வுகளை வழங்குவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா? சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் தற்போது நிலவும் வெற்றிடங்கள், வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் அல்லது குறித்த அமைச்சு எடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் அவர் சபையில் வினவவுள்ளார்.