(பாலமுனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சின்னப் பாலமுனைப் பகுதியில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 13 வீடுகளைக் கொண்ட புதிய வீடமைப்புத் திட்டம் “தஸ்மீனா கிராமம்” (Tasmina Village) என்ற பெயரில் நேற்று (16) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் தஸ்மினா (Tasmina) நிறுவனத்தின் முழுமையான நிதியனுசரணையுடனும், ஐகோன் (ICON) அமைப்பின் மேலதிக ஆதரவுடனும் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலமுனையைச் சேர்ந்த ‘பெட்டர் ஹேன்ட்ஸ் ஒப் ஹஹோப்’ (Better Hands of Hope) அமைப்பு இக்கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்பட்டு தற்போது பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஒரு படுக்கையறையைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதம் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘பெட்டர் ஹேன்ட்ஸ் ஒப் ஹஹோப்’ அமைப்பின் தலைவர் ஜே. அமீன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், தஸ்மினா நிறுவனத்தின் (USA) ஸ்தாபகர் அப்துல் சாஹுல் ஹமீத் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உதவித் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாசிம் சூரி மதனி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு வீடமைப்புத் திட்டத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மேற்படி அமைப்பின் ஆலோசகர்களான டாக்டர் எஸ். றிபாஸ்தீன், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச். ஹஸான் றுஸ்தி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ. சிறாஜ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பஸ்மில் மற்றும் பாலமுனை பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிர்வாகிகள், கல்விமான்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





