இஸ்ரேலில் நிலவும் பதற்றமான மற்றும் எதிர்பாராத சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வாழும் அல்லது விடுமுறையில் சென்றுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ளது.
தற்போது, இஸ்ரேலிலிருந்து இலங்கை திரும்ப விரும்பும் இலங்கையர்கள், எகிப்து வழியாக பயணம் செய்யலாம். இவ்வகை பயணத்திற்கு, செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா மற்றும் கடவுச்சீட்டுடன் தூதரகத்துக்கு நேரில் செல்ல வேண்டும் எனவும், அந்த வழியாக செல்ல 96 நாட்களுக்கு விசா வழங்கப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்விசா பெறுவதற்கான கட்டணம் 50 அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் கூறியதாவது, தற்போது சுமார் 20,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலை செய்து வருகின்றனர். அதேவேளை ஈரானில் 35 இலங்கையர்களே இருப்பதாகவும், போர்த் சூழ்நிலை மோசமடையும் பட்சத்தில், அயல் நாடுகளுடன் இணைந்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது தொழில்நிமித்தமாக இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வந்துள்ளவர்களுக்கு விசா நீடிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.