(அபூ உமர்)
அமைதியாகவும், உல்லாசப்பயணிகளுக்கிடையே பிரபலமான இடமாகவும் விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் – அருகம்பே பகுதியானது தற்போது அதிகரித்த பாதுகாப்பு சூழலால் மக்கள் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு முரணான நிறுவனமொன்று குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பிரதேச மக்கள், மீனவர்கள், விவசாயிகள், மற்றும் அப்பகுதியில் சுற்றுலா வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரிடமும் அச்ச உணர்வு உருவாகியுள்ளது.
இந்த நிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (17.06.2025) பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
“இஸ்ரேல் நிறுவனத்தை பதிவு செய்யப்பட்ட பிரதேசத்திற்கு மாற்றி அனுப்பி, அருகம்பே பகுதியில் நிலவிய அமைதியை மீட்டெடுக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு எப்போதும் நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஆனால், பொதுமக்கள் நிம்மதியாக வாழும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.