இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒருபுறமாக ஆதரிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றிய அவர், “ஈரான் இன்று தற்காப்புக்காகவே இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதலில் தாக்கியது இஸ்ரேலே. அதற்கு பதிலடி கொடுப்பதுதான் ஈரானின் நியாயமான பதிலடியாகும்,” என்றார்.
இஸ்ரேல், மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதால்தான் அந்த பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்காலத்தில், 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கிய நாடு ஈரான் என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்தக் கடனை இன்னும் திருப்பி செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது அரசாங்கம் ஈரான் விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயல்படுகிறது. இது கோழைத்தனமாகும்,” என்றார்.
மேலும், கடந்த காலங்களில், இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானமெடுத்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்திய அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாக எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என விமர்சித்தார்.
அத்துடன், நிந்தவூர் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைகளில் ஏற்பட்ட அனியாயங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், “நிந்தவூரில் முறைகேடுகள் இருந்தால் எங்கள் வேட்பாளர் எம்.பி. ஆக தெரிவு செய்யபட்டிருக்கமாட்டார்.ஆனால் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கற்பிட்டியில் பாதுகாப்பு அதிகாரிகள் எங்கள் பிரதிநிதியைக் கடத்திச் சென்று வாக்களிக்க முடியாமல் செய்ததால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தலைமை தவறியது. இதற்கான நீதிக்காக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்,” என்றார்.