அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக மாளிகைக்காட்டை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில் இன்று (25) தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் தலைமையில், காரைதீவு பிரதேச சபை மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தெரிவு நடைபெற்றது.
இதற்குமுன் நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிருஸ்ணபிள்ளை செல்வராணி ஆகியோர் போட்டியிட்டனர். பாஸ்கரனுக்கு, அவரது கட்சி மட்டுமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோரின் ஆதரவும் கிடைத்தது.
மற்றொரு பக்கத்தில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு தங்களது கட்சியின் ஒரே உறுப்பினரான எஸ். சுலட்சனா மட்டுமே ஆதரவளித்தார். அதே கட்சியைச் சேர்ந்த ஏ. பர்ஹாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உப தவிசாளர் பதவிக்கான போட்டியில் வேறு எந்த வேட்பாளரும் முன்வராததால், தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் பரிந்துரைக்கப்பட்ட எம்.எச்.எம். இஸ்மாயில் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. தாஹீர், எம்.எஸ். உதுமா லெப்பை, கே. கோடிஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றனர்.