Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

ஒலுவில், தீகவாபிக்கு பொது விளையாட்டு மைதானம் அமைக்க நில ஒதுக்கீடு

Posted on July 28, 2025 by Admin | 142 Views

ஒலுவில் மற்றும் தீகவாபி பகுதிகளுக்கு தேவையான பொது விளையாட்டு மைதானங்களுக்கான நிலங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து விசேட ஆலோசனை கூட்டம் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கரின் தலைமையில் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச உதவிச் செயலாளர் திருமதி எப். நஹீஜா முஸக்கீர், பிரதேச செயலாளர் எல்.எம். இர்பான், பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ். சத்தார் மற்றும் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2025 பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் ஒலுவில் பிரதேச மக்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கான ஒலுவில் LRC காணியிலிருந்து இடத்தை வழங்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் காணி சீர்திருத்தல் ஆணைக்குழுவிற்கான காணியினை நில அளவை செய்வதற்கு 2019 ல் 85,000/- ரூபா செலுத்தப்பட்டும் இதுவரை ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணி விடுவிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்ததுடன், தீகவாபி பிரதேசத்தில் விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வன இலாகாத் திணைக்களத்தினால் விடுவிப்புச் செய்யப்படாமல் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரேரணை முன்வைத்தார்.

அதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, துறை சார்ந்த அதிகாரிகளுடன் குழுவொன்றை அமைத்து இந்த விவகாரத்தை விரைவில் தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்த உத்தரவு வழங்கியிருந்தார்.இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று இக்கூட்டம் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  1. தீகவாபி விளையாட்டு மைதானத்திற்கு 2 ஏக்கர் நிலம்:
    வன இலாகா திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்ட நிலையில், அந்த நிலத்தை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப் பிரதேச செயலாளருக்கு உத்தரவு.
  2. ஒலுவில் விளையாட்டு மைதானத்திற்கு 6 ஏக்கர் நிலம்:
    ஒலுவில் LRC காணியிலிருந்து 6 ஏக்கர் நிலத்தை அடையாளப்படுத்தி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு ஒதுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானம்.
  3. நில அளவைப் பணிக்கு நேரடி நடவடிக்கை:
    இரண்டு வாரங்களுக்குள் நில அளவை பணிகளைத் தொடங்கவும், ஒலுவில் விளையாட்டு மைதானத்திற்கான நிலத்தை தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, ஏ. ஆதம்பாவா, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் மற்றும் அதிகாரிகள் இணைந்து, காணிகள் அமைந்துள்ள இடத்தை நேரில் பார்வையிட்டனர்.