மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக இன்று (மே 26) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதியுடன், முன்னாள் உபவேந்தரின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த பதவி காலியிடமாகவே காணப்பட்டது.
இதற்கிடையில், பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் பதில் உபவேந்தராக கடமையாற்றி வந்தார்.
புதிய உபவேந்தரை நியமிக்கும் பணியினைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பேரவையின் பரிந்துரை மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர், பல்கலைக்கழக சட்டத்தின்படி, அதற்குரிய நியமன விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட செயல்முறைகளுக்கமைய, ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்று பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மே 26ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.