யார் உண்மை சொல்கிறார்கள்?
கல்விக்காக காத்திருக்கும் பொத்துவில் மக்கள்
பொத்துவிலில் தனி கல்வி வலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்குள்ள மக்களின் பல வருடக் கனவு. அந்தக் கோரிக்கையைச் சுற்றியே இன்று பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.
“உதுமாலெப்பை எம்பி முன்வைத்த பொத்துவில் தனிக் கல்வி வலயக் கோரிக்கையை நிராகரித்தனர் கோடீஸ்வரன் மற்றும் ஆதம்பாவா” என்ற செய்தி வெளிவந்தவுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபூபக்கர் “மறுப்பு தெரிவிக்கிறார் ஆதம்பாவா எம்பி” என்று தனது முகப்புத்தகத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மறுப்புகள் வெளிவந்துவிட்டாலே மக்களுக்குள் இயல்பாகவே கேள்விகள் எழுகின்றன
👉 அங்கே உண்மையில் என்ன நடந்தது?
👉 யார் சொன்னது சரி?
👉 யார் பின்னர் மறுத்தார்கள்?
நேற்று (26) அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், பொத்துவில் தனிக் கல்வி வலயம் குறித்து உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட பிரேரனை முக்கியமான விவாதப் பொருளாக மாறியது.
அங்கு இருந்த எம்பிக்களான உதுமாலெப்பை, ஆதம்பாவா, அப்துல் வாசித், கோடீஸ்வரன் மற்றும் தவிசாளர் முஸாரப் ஆகியோர் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தனர்.
ஆனால் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகளுக்கும் கூட்டத்திற்குப் பிறகு வந்த மறுப்புகளுக்குமிடையிலான முரண்பாடு இன்று மக்களின் மனதில் குழப்பத்தை விதைத்துள்ளது.
பொத்துவில் மக்களின் கவலை ஒரே ஒன்று தான்
“எங்கள் குழந்தைகளின் கல்விக்கான பாதை திறக்கப்படுமா? அல்லது அரசியல் வாக்குவாதங்களில் பலியாகுமா?”
கல்வி என்பது ஒரு சமூகத்தின் உயிர் மூச்சு. அதனை அரசியல் கணக்குகளால் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பேசப்படும் போது, மறுப்புகளும், மறைவுகளும் தேவையில்லை, வெளிப்படைத்தன்மை மட்டுமே தேவையானது.
எமது தெளிவு செய்தித்தளம் எந்த அரசியல்வாதிக்கும் சார்பாகச் செயற்பட வேண்டிய அவசியமோ , தேவையோ கிடையாது. மக்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
பாராளுமன்ற உறுப்பினர்களால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நேற்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை நாம் எமது முகப்புத்தகத்தில் வெளியிடவுள்ளோம்.
உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது கடமை.
இறுதி தீர்ப்பு மக்களிடமே?