(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
கிழக்கு மாகாண கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்திய நிந்தவூர் றியல் இம்றான் மெகா நைட் 2025 மின்னொளி மென்பந்து தொடர் உச்சக்கட்ட பரபரப்புடன் நிறைவடைந்தது.
தனது வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்திய அட்டாளைச்சேனை சோபர் அணியானது அக்கரைப்பற்று டீன் ஸ்டார் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை மீண்டும் கைப்பற்றியது.
இறுதிப்போட்டியானது த்ரில்லர் தருணங்களை தந்த நிலையில் சோபர் வீரர்கள் ஒவ்வொரு பந்தையும் கட்டுப்படுத்தி, ரசிகர்களின் கரகோஷம் மத்தியில் வெற்றிக் கோப்பையையும் 60 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும் வென்றனர்.
இந்த தொடரில் கிழக்கு மாகாணம் முழுவதிலும் இருந்து 64 அணிகள் பங்கேற்றிருந்தன. அத்தகைய கடுமையான போட்டிகளிலும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரும் சோபர் அணியானது இத்தொடரையும் கைப்பற்றியிருப்பது அவ் அணியின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
அணியின் தலைவர் ரப்சான், தான் களமிறங்கிய தருணங்களில் எல்லாம் ரசிகர்களை மெய்மறக்கச் செய்து ஆட்டநாயகன் விருதையும் குவித்தார்.
நிந்தவூர் ரியல் இம்றான் விளையாட்டுக்கழகம் மிகச்சிறப்பாக நடத்திய இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.