Top News
| மூதூர் வேதத்தீவு மக்களின் வாழ்நாள் கனவான பாலத்தினை அமையுங்கள் | | மேல் மாகாண பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம் | | அட்டாளைச்சேனையைப் பெருமைப்படுத்தும் இளம் பேராசிரியர் |
Jun 6, 2025

பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்

Posted on May 31, 2025 by Admin | 54 Views

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், நாட்டின் பிற பகுதிகளில் 30-40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பரப்புகளில் தீவிர காற்று எச்சரிக்கை

சிலாபம் – புத்தளம் – மன்னார் – காங்கேசன்துறை, மற்றும் காலி – ஹம்பாந்தோட்டை – பொத்துவில் வரை பரந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 40–50 கிலோமீற்றருக்கு மேல் வீசக்கூடும். சில நேரங்களில் அது 60–70 கிலோமீற்றரை எட்டக்கூடும்.

மேலும், சிலாபம் – கொழும்பு – காலி மற்றும் காங்கேசன்துறை – திருகோணமலை – மட்டக்களப்பு வரை உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 50–60 கிமீ வரை உயரக்கூடும்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இதன் விளைவாக, மேலே குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நிலைமைகள் மறுஅறிவித்தல் வரை தொடரக்கூடும்.