இலங்கையில் வரும் 21ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்கிழக்குப் பகுதியில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்தப் பகுதி இதற்குக் காரணமாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த குறைந்த காற்றழுத்தம் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படுத்தாது என்றாலும் மழைப்பொழிவின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், தொடர்ச்சியான மழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன என அந்நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நிலவும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் முகாமைத்துவ பொறியாளர் எச்.எம். ஹேரத் கூறுகையில், திணைக்களத்தின் கீழ் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள் கடும் மழையால் மிகுந்த சேதத்தைச் சந்தித்துள்ளதாக அந்நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.