பாராளுமன்றத்தில் வரும் நவம்பர் மாதம் மூன்று நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் இன்று (23) அறிவித்தார்.
இப் பாதுகாப்பு சோதனை நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அந் நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உள்ளிட்ட முழு பாராளுமன்றக் கட்டிடமும் முழுமையான பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
மேலும் நவம்பர் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளிலும் விசேட சோதனை நடத்தப்படும். அன்றைய தினம் பொது மக்களின் பார்வை பகுதி விருந்தினர்களுக்கே மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படும். அத்துடன், அந்த நாளில் விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சாரதிகளுடன் வருகை தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் பாராளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும், எனவே உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வேறு நிறுத்துமிடங்களுக்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும் அன்றைய தினம் விசேட போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.