(குரு சிஷ்யன்)
மாகாண மட்ட இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டிகள் கடந்த 2025 ஒக்டோபர் 04ஆம் திகதி கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
இப் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் பல கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது மொழியாற்றல், சிந்தனை திறன், மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தி சிறப்பாகப் போட்டியிட்டனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் உள்ள அறபா வித்தியாலயத்தின் இருமொழிக் கற்கைப் பிரிவில் தரம் 09ல் கல்வி பயிலும் மாணவன் எம்.ஜே.எம். வக்கீப் “மொழிப் பிரயோகம் மற்றும் கிரகித்தல்” போட்டியில் பங்குபற்றி தனது கூர்மையான அறிவுத் திறமையால் இரண்டாம் இடத்தை கைப்பற்றி அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இச்சாதனையால் அறபா வித்தியாலயம் அதன் ஆசிரியர்கள், அட்டாளைச்சேனை கல்விச் சமூகம், அக்கரைப்பற்று கல்வி வலயம் மேலும் கிழக்கு மாகாணமும் பெருமையடைகிறது.
இம் மாணவன் அட்டாளைச்சேனை 09ம் பிரிவைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.எல். ஜெலீல் மற்றும் அல்முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியை எஸ்.எல். சுஹைரா வீவி ஆகியோரின் புதல்வராகும். பெற்றோரின் தொடர்ந்த ஊக்கமும் ஆதரவும் அவரின் கல்விச் சாதனையில் ஊன்றுகோலாய் அமைந்துள்ளது.
இம்மாணவனை திறமையாக வழிநடத்திய ஆசிரியை ஜே.கே.எப். றிக்காஸா, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக எப்போதும் உழைத்து வரும் அதிபர் எம்.ஐ.எம். அஜ்மீர் , அக்கறைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் சிங்களப் பாட ஆசிரிய ஆலோசகர் நிலுக்ஸன் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் இதயம் கனிந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
அறபா வித்தியாலயத்தின் வரலாற்றில் தேசிய ரீதியான போட்டிக்கு ஒரு மாணவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும் எனும் பெருமையையும் இச்சாதனை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், அறபா வித்தியாலயத்தின் பெயர் தேசிய ரீதியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இச்சாதனை அப்பாடசாலையின் கல்வித் தரத்தையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதோடு பிற மாணவர்களுக்கும் ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக விளங்குகிறது.
இம் மாணவன் தேசியத்திலும் வெற்றி பெற்று சாதனைகளை சரித்திரமாக்கி சமூகத்திற்கும் பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!