எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், கிழக்கு மாகாணத்திற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக, தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த வாரம், இரு கட்சித் தலைவர்களான அதாஉல்லா மற்றும் றவூப் ஹக்கீம் இடையே இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், எதிர்கால தேர்தல்களை முன்னிட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என்றும் அரசியல் வட்டாரங்கள் தகவலளிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தின் கீழ் அதாஉல்லா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் திட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதை அரசியல் பீடங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைவு குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதி நிலையில் உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலம் மீண்டும் உயரும் போக்கில் உள்ளதுடன், சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு அதிகரித்துள்ளதாக கட்சியின் உயர் பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.