(அபூ உமர்)
தரம் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயங்கி வரும் பொத்துவில் பஸ் டிப்போவில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து, உடனடி தீர்வு வழங்குமாறு நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் விமானத்துறை அமைச்சிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று (05.06.2025) நடைபெற்ற நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் விமானத்துறை அமைச்சின் செயல்பாடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
“பொத்துவில் பஸ் டிப்போ தற்போது பெயரளவிலேயே தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எரிபொருள் நிரப்பும் நிலையம், வாகன திருத்த மையம், நிரந்தர கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் செயல்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் நிலை,” என அவர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளிலிருந்து ஏனைய பிரதேசங்களான எல்லே, நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் கட்டுநாயக்கை நோக்கி நவீன பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார்.