Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

நாடு முழுவதும் மழை, காற்று, மூடுபனி நிலவும் சாத்தியம்

Posted on December 30, 2025 by Admin | 368 Views

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேற்கண்ட பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.