மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் மத்தியில் ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான Bushehr Nuclear Power Plant மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து ஈரான் கடும் கவலை வெளியிட்டுள்ளது.
அந்த அணுமின் நிலையத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பாரிய கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என ஈரான் சர்வதேச சமூகத்திற்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அணுமின் நிலையத்திற்கு அருகில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல்களாகும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி
, ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸுக்கு அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தாக்குதலின் விளைவாக அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் நேரடி அபாயம் உருவாகியுள்ளதாகவும், இது ஈரானை மட்டுமல்லாது மத்திய கிழக்கு முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் மனித வாழ்விற்கு மீளமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமை (International Atomic Energy Agency)இதுவரை கதிர்வீச்சு மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்தாலும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏற்கனவே பதற்றம் சூழ்ந்துள்ள சூழலில் ஈரானின் இந்த எச்சரிக்கை உலக நாடுகளில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.