வளைகுடா பிராந்தியத்தில் தீவிரமடைந்திருந்த போர்நிலை கடைசி நிமிடத்தில் எதிர்பாராத திருப்பத்தை எட்டியுள்ளது. “ஒரு நாகரிகமே அழியும்” என எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீர் முடிவாக 14 நாட்கள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
இந்த முடிவு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஈரானின் மின்நிலையங்கள் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இந்த நிலைமையை ஈரான் “வரலாற்று வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, ஈரானின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும், யுரேனியம் செறிவூட்டலை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகியுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகம் தொடர்பிலும் ஈரானுக்கு முக்கிய பங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்க தரப்பு இதனை வேறுபட்ட கோணத்தில் விளக்குகிறது. தனது ராணுவ இலக்குகளை ஏற்கனவே அடைந்த பின்பே இந்த சமாதான வாய்ப்பு வழங்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வார போர்நிறுத்த காலத்தில், வளைகுடா பகுதியில் தாக்குதல்கள் நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடுகளின் உண்மை நிலை தெளிவாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த திடீர் மாற்றம் உலக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவதுடன் இது உண்மையான சமாதான முயற்சியா அல்லது தந்திர அரசியலா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.