ஈரானை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல்கள் தொடர்ந்து ஒரு மாத காலம் நீடித்தன. பின்னர் இரு வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் கொண்டு வரப்பட்டது.
இச்சூழலில் ஈரானுக்கு சீனா ராணுவ உதவி வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளப் பதிவில், “ஈரானுக்கு சீனா ராணுவ உதவி வழங்குகிறது என்ற தகவல்கள் அனைத்தும் உண்மையற்றவை அவை முற்றிலும் கற்பனையாக உருவாக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆதாரமற்ற தகவல்களை முன்னிட்டு அமெரிக்கா சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதிக்க முயன்றால் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.