(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான வலயமட்ட பெருவிளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மாணவர்களின் உடல் தகுதி, ஒற்றுமை உணர்வு மற்றும் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டிகளில் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக 16 வயது பிரிவினருக்கான வலயமட்ட கரப்பந்தாட்டப் போட்டிகள் இன்று (21) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயமும் மோதின. போட்டியின் இறுதியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை வெற்றிபெற்றுமுதலாவது இடத்தையும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
வலய மட்டத்தில் முதல் இரு நிலைகளைப் பெற்ற அணிகள் அடுத்த கட்டமான மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன. வலய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அணியை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர் ஜே. பஸ்மீர், அதிபர் எம். ஐ. அஜ்மீர் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.