(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியினால் பல்வேறான அபிவிருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினால் கடலோர மீனவ சமூகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு அவசியமான மின்சார வசதிகளை விரிவுபடுத்துவதும், பழுதடைந்த மீனவர் கட்டிடங்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் கள விஜயம் நேற்று (23.04.2026) துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
கடலோர வாழ்வாதாரத்தை நம்பி வாழும் மீனவர்களின் தொழில் சூழலை மேம்படுத்துவதோடு, மீனவர்களின் நாளாந்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இத்திட்டம் அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் இணைப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.ஏ.அன்சார், பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பாயிஸ், எம்.எல்.ரினாஸ், நிந்தவூர் பிரதேச மின்சார சபை மின் அத்தியட்சகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.




