Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அர்ச்சுனா எம்பி 29ம் திகதி வரை விளக்கமறியலில்

Posted on April 27, 2026 by Admin | 166 Views

தனிப்பட்ட பாதுகாப்பு கைத்துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது மேலதிக விசாரணைகள் நடைபெறும்வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றைச் சுற்றி பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டநாள் முரண்பாடு நிலவி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை குறித்த காணிக்குள் ஏற்பட்ட மோதல் வாய்த்தர்க்கமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தமது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியதுடன் வாக்குமூலம் பெறுவதற்காக இராமநாதன் அர்ச்சுனா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தமது காணிக்குள் அத்துமீறி நுழைந்து தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.