இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வட அகலாங்கு 10.1 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 82.5 அருகே மையம் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பான நிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்த 48 மணித்தியாலங்களில் இந்த அமைப்பு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்கள், கடல்சார் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.