இலங்கையின் பல மாகாணங்களில் அடுத்த சில நாட்களிலும் கடும் மழை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வட மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே உருவாகியுள்ள குறைந்த அழுத்த பிரதேசத்தின் தாக்கமே இந்த வானிலை மாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டை அண்மித்த பகுதியில் காணப்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுவடைந்து குறைந்த அழுத்தமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலையுடன் இடைக்கிடையாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.