2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்தத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவ்வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (14) வெளியிடப்பட்ட தீர்ப்பின் மூலம் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழுவால் வழங்கப்பட்டது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதாகக் கூறி முன்னாள் பணிப்பாளர் பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.