(கல்முனை செய்தியாளர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ள இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக இந்த இடைக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நேர்முகப் பரீட்சை மூலம் நிரந்தரமாக நியமிக்கும் வரை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக தனது கடமைகளைத் தொடர்ந்தபடியே மேலதிக பொறுப்பாக அக்கரைப்பற்று வலயத்தையும் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தொடர்வார்.
கல்வி நிர்வாகத் துறையில் அனுபவமிக்க அதிகாரியான சஹுதுல் நஜீம் கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.