தெனியாய பகுதியில் சில பாடசாலைகளில் முதலில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருவதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் தியத்தலாவ பகுதியில் 28 பேரும், வெலிமடை பகுதியில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் 25 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நோய் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே அதிகமாக பரவி வருவதாகவும், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அறிகுறிகள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும், முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளிகள் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நிலைமையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
உணவு, நீர் மற்றும் நேரடி தொடர்புகள் மூலம் இந்த மூளைக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், தற்போது நிலவும் மழைக்கால சூழ்நிலை மற்றும் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகள் வழியாக நோய் மேலும் பரவ வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து அதிக அவதானத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.