(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பணிப்பாளராக நீண்டகாலம் சிறப்பாகப் பணியாற்றி நாளை (24) ஓய்வுநிலையை அடையவுள்ள அஷ்ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் கல்விச் சேவையை பாராட்டும் நிகழ்வு நேற்று (22) அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் எம்.ஐ. அஜ்மீர் தலைமையிலான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDC) உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஓய்வுபெறவுள்ள வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
கல்வி நிர்வாகத் துறையில் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் மாணவர் நலன் சார்ந்த சேவைகளால் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த அஷ்ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார் என நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அஜ்மீர் பாராட்டினார்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஐ.எல். ஜெலீல், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.ஸி. அனீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் யு.எல். மப்றூக், ஜனாப் றுமைஸ், உதவி அதிபர் ஏ.ஏ. பனீஸ் மற்றும் ஆசிரியர்களான ஏ.எல். நுபைஸ், ஜே. பஸ்மீர், டபிள்யூ. நிஹார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

