Top News
| வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி ஆரம்பம் | | அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தெளிவூட்டல் | | 10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறை |
Jun 8, 2026

எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும்

Posted on June 1, 2026 by Admin | 66 Views

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் என்று துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் இதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட QR மற்றும் கோட்டா முறைகள் மூலம் எரிபொருள் நுகர்வு ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும் அது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அதற்கான புள்ளிவிவரங்களையும் முன்வைத்தார். அதன்படி கடந்த ஜனவரியில் 186 மில்லியன் டொலராகவும், பெப்ரவரியில் 97 மில்லியன் டொலராகவும் இருந்த எரிபொருள் செலவினம் கடந்த மே மாதத்தில் 524 மில்லியன் டொலர்கள் வரை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலைமையைத் தொடர்ந்து தாங்கிக்கொள்வது சாத்தியமற்றது எனக் குறிப்பிட்ட அமைச்சர் நாட்டை விட்டு வெளியேறும் டொலர்களின் அளவைக் கட்டுப்படுத்தத் தவறினால் அது எதிர்காலத்தில் மேலும் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றார். எனவே இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் டிஜிட்டல் அமைச்சு ஆகியன இணைந்து தற்போதைய QR முறைமையை மேலும் தீவிரமாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் அநுர கருணாதிலக மேலும் தெரிவித்தார்.