Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

குவைத் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

Posted on June 3, 2026 by Admin | 153 Views

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (03) ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் விளைவாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு தரையிறங்கவிருந்த பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தாக்குதலால் விமான நிலையத்தின் ‘டி1’ பயணிகள் முனையக் கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் குவைத் நோக்கி ஈரானால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடையாமல் நடுவழியிலேயே செயலிழந்ததாகவும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் பாதுகாப்புப் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் அறிவித்திருந்தது.

மேலும் பிராந்திய அண்டை நாடுகளை நோக்கி ஈரான் ஏவிய பலிஸ்டிக் ஏவுகணைகள் எதுவும் தங்களது இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஈரானின் தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டதுடன் ஈரானின் பல பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களையும் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.