2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையை (NIC) முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலகட்டத்தில் ஏற்படும் தேவையற்ற தாமதங்கள், நெருக்கடிகள் மற்றும் அசௌகரியங்களைத் தவிர்த்து, விண்ணப்ப செயல்முறைகளை தடையின்றி மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த முன்கூட்டிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.