(அட்டாளைச்சேனை செய்தியாளர்- சஹி)
அட்டாளைச்சேனை T.B. ஜாயா பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையினால் மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகி வந்தனர். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாணும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவசர விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தவிசாளர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இதன் மூலம், குடியிருப்பு மற்றும் பாடசாலைப் பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குரங்குகளைப் பாதுகாப்பான முறையில் பிடிப்பதற்கும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கும் முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குரங்குகளின் உடனடி அட்டகாசங்களில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் தற்காலிக ஏற்பாடாக அவற்றை விரட்டுவதற்கான வெடிகள் பாடசாலை அதிபரிடம் தவிசாளரினால் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதேச சபையின் இந்த விரைவான தலையீடு அப்பகுதி மக்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.