(கல்முனை செய்தியாளர்- பஸ்லான்)
அரச சேவையில் நீண்டகாலமாக நிலவிவரும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு முறையான தீர்வு காண்பதற்கும், அரச சேவையை தற்காலத்திற்கு ஏற்றவகையில் நவீனமயப்படுத்துவதற்கும் அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட ஆணைக்குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.
திரு. தெல்கே அஸோக பீரிஸ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர் மட்ட ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அஹமட் லெப்பை மொஹமட் முக்தார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களில் திரு. முக்தார் அவர்களின் நீண்டகால அனுபவமும் நிபுணத்துவமும் இந்த ஆணைக்குழுவின் பணிகளுக்குப் பெரும் பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஆராய்ந்து, அவர்களது சம்பளப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த ஆணைக்குழு தனது பணிகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.