Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடி போக்குவரத்து சோதனை – 149 வழக்குகள் பதிவு, 32 பைக்குகள் பறிமுதல்

Posted on June 29, 2026 by Admin | 129 Views

(அக்கரைப்பற்று செய்தியாளர்- ஆசிக்)

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் கடந்த ஜூன் 27ஆம் திகதி மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பாரிய விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி வழிகாட்டலில் அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட 49 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த அதிரடி சோதனையில் களமிறக்கப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்துவோருக்கு சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆபத்தான முறையில் அதிவேகமாக வாகனம் செலுத்தியமை தொடர்பாக 17 வழக்குகளும், வீதி ஒழுங்குமுறைகளை மீறியமைக்காக 4 வழக்குகளும் பதியப்பட்டன. உரிய சாரதி அனுமதிப்பத்திரமின்றி மிக அலட்சியமாக வாகனங்களை செலுத்திய 23 பேருக்கு எதிராகவும், தலைக்கவசம் (Helmet) அணியாமல் பயணித்த 76 பேருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் போது போதிய ஆவணங்களின்றி சந்தேகத்திற்கிடமான முறையில் செலுத்தப்பட்ட 32 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் விதிகளுக்குப் புறம்பாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் ஏனைய பாகங்களைப் போன்றே இப்பகுதியிலும் போக்குவரத்து சட்டங்கள் எவ்வித விதிவிலக்குகளுமின்றி பாரபட்சமற்று மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என இதன்போது பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அண்மைக்காலமாக அம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் பலர் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாமல் அதிவேகமாக வாகனங்களைச் செலுத்தி கோர விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான இளவயது மரணங்களைத் தடுக்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற திடீர் சோதனைகள் இனிவரும் நாட்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் உயர்தர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் வீதி பாதுகாப்பிற்கும் பொலிஸார் எடுத்து வரும் இந்தத் தீவிர நடவடிக்கைக்கு இப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.