(பாலமுனை செய்தியாளர் -பஸீனா)
2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற வலய மட்ட கணித வினாவிடைப் போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி அட்டாளைச்சேனை பெண்கள் உயர் தர பாடசாலைக்கு பெரும் புகழைத் தேடித்தந்த தரம் 7 மாணவி ஏ.ஏ. ஸீனத் மனாஹில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இம்மாணவிக்கான சான்றிதழ் வழங்கும் விசேட நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல். யாசீன் தலைமையில் கடந்த ஜூன் 22ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலையின் காலைப் ஆராதணையின் போது விமரிசையாக நடைபெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி ஏ.பீ. பாத்திமா நஸ்மியா கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழை வழங்கிப் பாராட்டியதுடன் இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் கணிதம் மற்றும் விஞ்ஞானத் துறைகளில் காட்டும் ஆர்வம் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.
மாணவி ஏ.ஏ. ஸீனத் மனாஹிலின் இந்த உன்னத சாதனைக்காக பாடசாலைச் சமூகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தினர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.