வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘பயனர் பெயர்’ (Username) என்ற புதிய தனியுரிமை அம்சத்தை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் டிஜிட்டல் தளங்களில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை (Privacy) குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை வாட்ஸ்அப் மூலம் ஒருவரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றால் நமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை அவரிடம் பகிர்வது கட்டாயமாக இருந்தது. இதனால் தேவையற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்களால் பயனர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். ஆனால், இந்த புதிய வசதியின் மூலம் இனி யாருக்கும் உங்கள் தொலைபேசி எண்களைத் தராமலேயே பிரத்யேகமான ஒரு யூசர்நேமை மட்டும் பகிர்ந்து மற்றவர்களுடன் அரட்டை அடிக்கவோ அல்லது அழைப்புகளை மேற்கொள்ளவோ முடியும்.
நீங்கள் விரும்பினால் மட்டுமே உங்கள் தொலைபேசி எண்களை மற்றவர்கள் பார்க்கும் வகையில் அமைப்புகளை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதன் மூலம் தேவையற்ற எண்களில் இருந்து வரும் தொல்லைகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த அம்சம் சோதனை முறையில் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே படிப்படியாக (Beta Version) வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பித்து (Update), Settings > Account > Username பகுதிக்குச் சென்று தங்களுக்குப் பிடித்தமான தனித்துவமான பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி அனைத்துப் பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்கள் வாட்ஸ்அப் செயலியில் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.