(அட்டாளைச்சேனை செய்தியாளர்- உமர்)
அட்டாளைச்சேனை மண்ணின் மைந்தரும் தேசிய மட்டத்தில் இலக்கிய உலகில் ஆழமான முத்திரை பதித்தவருமான மறைந்த ‘ஆசுகவி’ அன்புடீன் அவர்களின் புதல்வி பாத்திமா ஷக்கீனத் சட்டத்தரணி (Attorney-at-Law) இறுதித் தேர்வில் முதலாம் வகுப்பில் (First Class) சித்தியடைந்து பிரதேசத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஆங்கில மூலத்தில் சட்டத்துறையைக் கற்ற இவர் 73.38 சதவீத சிறந்த சராசரிப் பெறுபேற்றைப் பெற்று இந்த அபார அடைவினைப் பதிவு செய்துள்ளார்.இந்த வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைக்கான (LL.B.) சிறப்புப் பட்டத்தையும் இவர் வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டுள்ளமை இச்சாதனைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.
ஆசுகவி அன்புடீன் அவர்களின் இரட்டைப் புதல்விகளில் இளையவரான பாத்திமா ஷக்கீனத், தனது தந்தையின் வழியில் அறிவாற்றலில் சிறந்து விளங்குவதோடு, அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அளப்பரிய அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அறுவடையாகவே இந்த வெற்றியினைத் தனதாக்கியுள்ளார். தந்தை விட்டுச் சென்ற அறிவுப் பாரம்பரியத்தை, சட்டத்துறையின் ஊடாக இவர் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் சட்டத் துறையில் நேர்மையுடனும், உயரிய தொழில் தர்மத்துடனும் சேவையாற்றி சமூக நீதியை நிலைநாட்டும் அறப்பணியில் அவர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.