(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
இவ்வருடம் (2026) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் நிறுவனத்தின் ‘ஜூனியர் தமிழன்’ மாணவர் சஞ்சிகை ஏற்பாடு செய்த ‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ மாபெரும் இலவச வழிகாட்டல் செயலமர்வு கடந்த சனிக்கிழமை (25) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு அமைவாகவே மாணவர்களின் நலன் கருதி இந்தச் செயலமர்வு அட்டாளைச்சேனையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் இச்செயலமர்வில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றதுடன் வளவாளர்களால் மாணவர்களுக்கு பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான உளவியல் ஆலோசனைகளும், வினாக்களுக்கு இலகுவாக விடையளிக்கும் நுட்பங்களும் இங்கு விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டன.
அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் பூரண அனுசரணையில், நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் வழிகாட்டல் குறிப்புகள் அடங்கிய 800/= பெறுமதியான விசேட கல்விப் பொதியொன்றும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
அட்டாளைச்சேனை பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை எம்பியினால் விடுக்கப்பட்ட காலத்திற்குத் தேவையான இந்த இலவசச் செயலமர்வு கல்வியியலாளர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











